மேற்கு ஆசியா மற்றும் அரபு உலக அரசியலைப் புரிந்து கொள்ள, “தீவிரவாதத்திற்கு எதிரான போர்” (War on Terror) என்ற மேற்கத்திய கதைநாடகத்தைத் தாண்டி பார்க்க வேண்டும் என்று மைக்கேல் பரென்டி போன்ற அரசியல் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். அவர்களின் பார்வையில், சிரியா மற்றும் ஈராக் மீது நடந்த அமெரிக்க தலையீடுகள் வெறும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அல்ல; அவை எண்ணெய் வளங்கள், புவியியல் ஆதிக்கம் மற்றும் உலக முதலாளித்துவ நலன்களுடன் தொடர்புடையவை.
ஈராக் போர்: “அழிவுக் ஆயுதங்கள்” என்ற பொய்
2003ஆம் ஆண்டு, “Mass Destruction Weapons” (அழிவுக் ஆயுதங்கள்) வைத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தது. பின்னர் அத்தகைய ஆயுதங்கள் எதுவும் இல்லை என்பது வெளிவந்தது. இந்த போலி காரணத்தை பயன்படுத்தி, அமெரிக்கா ஈராக் அரசை கவிழ்த்தது.
சதாம் உசேன் ஆட்சி பல விமர்சனங்களுக்கு உட்பட்டிருந்தாலும், ஈராக் ஒரு வலுவான பொதுச் சேவை அமைப்பைக் கொண்டிருந்தது. கல்வி, மருத்துவம், மின்சாரம், உணவு மானியம் போன்ற துறைகளில் அரசு முக்கிய பங்கு வகித்தது. எண்ணெய் வளங்கள் முழுமையாக மேற்கத்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இல்லை. இதுவே அமெரிக்க தலையீட்டின் முக்கிய காரணங்களில் ஒன்றாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
போருக்குப் பிறகு, அபு க்ரைப் (Abu Ghraib) சிறைச்சாலை வன்முறைகள் உலகையே அதிர்ச்சியடையச் செய்தது. கைதிகள் மீது உடல் மற்றும் பாலியல் வன்முறைகள் நடத்தப்பட்ட புகைப்படங்கள் வெளியானது. மனித உரிமை அமைப்புகள், அமெரிக்க படைகளின் பல நடவடிக்கைகளை போர்க்குற்றங்களாக விமர்சித்தன.
சிரியா: “ஆட்சி மாற்றம்” அரசியல்
சிரியாவில், “Operation Timber Sycamore” போன்ற ரகசிய திட்டங்கள் மூலம் CIA பல ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு வழங்கியதாக பின்னர் தகவல்கள் வெளியானது. அதிகாரபூர்வமாக “மிதமான எதிர்ப்புக் குழுக்கள்” என கூறப்பட்ட பல அமைப்புகள், பின்னர் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அமெரிக்காவின் நோக்கம், பஷார் அல்-அசாத் அரசை கவிழ்த்து, மேற்கத்திய நாடுகளுக்கு சாதகமான அரசியல் அமைப்பை உருவாக்குவதாக விமர்சகர்கள் வாதிட்டனர். இந்த செயல்முறையில், சிரியா நீண்டகால உள்நாட்டு போருக்குள் தள்ளப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்; ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர்.
சோசலிசம் மற்றும் அரபு உலகம்
மேற்கு ஆசியாவில் சோசலிசம் மற்றும் சமூகநீதியை அடிப்படையாக கொண்ட அரசியல் புதிய விஷயம் அல்ல. சிரியாவின் பாஅத் (Ba’ath) அரசியல், ஈராக் அரசியல், எகிப்தில் நாசர் காலம் போன்றவை அரபு தேசியவாதம், அரசின் கட்டுப்பாட்டிலான வளங்கள், பொதுக் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நல திட்டங்களை முன்னிறுத்தின.
லிபியா, ஈராக், சிரியா போன்ற நாடுகளில், அரசுகள் எண்ணெய் வளங்களை பயன்படுத்தி இலவச கல்வி, மருத்துவம், வீட்டு வசதி மற்றும் உணவு மானியங்களை வழங்கின. பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும் முன்னேற்றம் ஏற்பட்டது.
ஆனால் இந்த மாதிரியான அரசியல் அமைப்புகள், மேற்கத்திய கார்ப்பரேட் மற்றும் ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிரானவையாக பார்க்கப்பட்டன. அதனால், பொருளாதார தடைகள், ஊடக பிரச்சாரம், அரசியல் குழப்பங்கள் மற்றும் ஆயுத தலையீடுகள் மூலம் அவை பலவீனப்படுத்தப்பட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“தீவிரவாதத்திற்கு எதிரான போர்” யாருக்கு லாபம்?
மைக்கேல் பரென்டியின் பார்வையில், “தீவிரவாதத்திற்கு எதிரான போர்” பல நேரங்களில் புதிய போர்களையும் நிரந்தர அசாதாரண நிலைகளையும் உருவாக்கியது. ஆயுத உற்பத்தி நிறுவனங்கள், எண்ணெய் கம்பெனிகள் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனங்கள் இதன் மூலம் பெரும் லாபம் அடைந்தன.
சிரியா மற்றும் ஈராக் வரலாறு, ஏகாதிபத்தியம் எவ்வாறு “பாதுகாப்பு”, “ஜனநாயகம்”, “மனித உரிமைகள்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி தலையீடு செய்கிறது என்பதை காட்டுகிறது. இந்த போர்களின் உண்மையான விலையை செலுத்தியது சாதாரண மக்கள் தான். கொள்ளையடிக்கப்பட்ட எண்ணெய் வளங்களை வைத்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய உலகம் தங்களின் ஆதிக்கத்தையும் லாபத்தையும் விரிவுபடுத்தியது. Chevron, ExxonMobil, Citibank, BlackRock, Lockheed Martin, Wells Fargo போன்ற நிறுவனங்கள் போரிலும் சுரண்டலிலும் முதலீடு செய்து
மக்களின் துயரத்தில் லாபம் கண்டன. மீண்டும் போரில் இறங்கி காசா, பாலஸ்தீனம், ஈரான், சூடான், வெனிசுவேலா என— இந்த சுரண்டல் தொடர்ந்து நீள்கிறது.
ஏன் சர்வதேச ஒற்றுமையும் சோசலிச முன்னணியும் அவசியம்?
ஏகாதிபத்தியம் இன்று ஒரு நாட்டின் பிரச்சினை மட்டும் அல்ல; அது உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பாக செயல்படுகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய சக்திகள், பொருளாதார தடைகள், போர்கள், உளவுத்துறை தலையீடுகள், ஊடக பிரச்சாரங்கள் மற்றும் ஆயுதக் குழுக்கள் மூலம் பல நாடுகளில் அரசியல் நிலைகுலைவை உருவாக்குகின்றன. இதற்கு எதிராக தனித்தனி நாடுகள் மட்டும் போராடுவது போதுமானதாக இருக்காது.
அதனால் தான், சர்வதேச இடதுசாரி இயக்கங்களின் ஒற்றுமை மற்றும் ஒரு வலுவான சோசலிச முன்னணி அவசியமாகிறது. உழைக்கும் மக்களின் உரிமைகள், நாடுகளின் சுயாட்சி, இயற்கை வளங்களின் பொதுக்கட்டுப்பாடு, கல்வி மற்றும் சுகாதார உரிமைகள் ஆகியவற்றை பாதுகாக்கும் அரசியல் சக்தியாகவே இந்த ஒற்றுமை செயல்பட வேண்டும்.
பரென்டியின் பார்வையில், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் வெறும் ராணுவ எதிர்ப்பு அல்ல; அது மனித விடுதலைக்கான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் போராட்டம். அதனால் தான், உலக மக்களின் ஒற்றுமை, சமூகநீதி மற்றும் சோசலிச அரசியல் — இவை அனைத்தும் ஏகாதிபத்தியத்துக்கும் தீவிரவாத அரசியலுக்கும் எதிரான முக்கியமான மாற்று சக்திகளாகின்றன.