"Gen Z மோதலை விரும்புவதில்லை", "Gen Z போராட விரும்புவதில்லை" என்று சொல்லப்படுவது ஒரு சமூக ஆய்வின் முடிவு அல்ல; திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட அரசியல் பிரச்சாரம். முன்னணி செய்தி நிறுவனங்களும் சமூக ஊடகங்களும் இந்தத் தவறான சித்தரிப்பைத் தொடர்ந்து பரப்பி வருகின்றன.
யார் Gen Z ?
Gen Z என்பது ஒரே மாதிரியான (Homogeneous Group) சமூகப் பிரிவு அல்ல. அவர்கள் அனைவரும் ஒற்றைத்தன்மையுடைய சிந்தனை, வாழ்க்கை அனுபவம், அரசியல் பார்வை கொண்ட தலைமுறை அல்ல. அதற்குள் எல்லா வர்க்கங்களையும், சமூகப் பிரிவுகளையும் சேர்ந்த இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அரசியலும், வாழ்க்கை அனுபவங்களும், எதிர்காலக் கனவுகளும் வெவ்வேறானவை.
எந்த GEN Z தரப்பைப் பற்றி பேசுகிறோம்?
முதலில் கேட்க வேண்டிய கேள்வி: எந்த Gen Z? நலவுடைமை கொண்ட, உயர்சாதி பிரிவைச் சேர்ந்த, வலுவான பொருளாதாரப் பின்னணி கொண்ட நடுத்தர வர்க்க இளைஞர்களா? அல்லது அன்றாட சமூக நெருக்கடிகளை நேரடியாக எதிர்கொள்ளும் அந்தத் தரப்பினரா? கார்ப்பரேட் ஊடகங்களும் சமூக ஊடக அல்காரிதங்களும் அந்த முதல் தரப்பினரையே "Gen Z" என்று உலகிற்கு அறிமுகப்படுத்துகின்றன. ஆனால் அவர்கள் இந்த தலைமுறையின் முகம் அல்ல; வசதி பெற்ற ஒரு தரப்பின் முகம் மட்டுமே.
மக்கள் களத்தில் Gen Z
உண்மையான Gen Z இன்று NEET திணிப்புக்கு எதிராகப் போராடுகிறது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறது. No Kings போன்ற ஜனநாயக இயக்கங்களிலும், மாணவர் போராட்டங்களிலும் முன்னணியில் நிற்கிறது. சட்டவிரோத IT பணிநீக்கங்கள், ஆணவக் கொலைகள், சாதி ஆதிக்கம், மதவெறி, இனவெறி, பாசிசம் ஆகியவற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் களத்தில் உள்ளது.
வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளிலும் இளைஞர்கள் களத்தில் நிற்பதைப் பார்த்திருக்கிறோம். உரிமைக்காகப் போராடும் இளைஞர்கள் எல்லாத் தலைமுறைகளிலும் இருந்திருக்கிறார்கள்; இன்றைய Gen Z-யும் அதற்கு விதிவிலக்கல்ல.
அரசியல்நீக்கத்தின் அரசியல்
இந்தப் பிரச்சாரத்தின் மற்றொரு நோக்கம் இளைஞர்களை அரசியல்நீக்கம் செய்வதுதான். "அரசியல் பயனற்றது", "போராட்டங்களால் எதுவும் மாறாது", "போராட்டம் என்பது பழைய காலத்து அரசியல்", "ரீல்ஸும் டிரெண்ட்ஸும் போதும்", "தனிநபர் வெற்றியே முக்கியம்" போன்ற மனநிலைகளை உருவாக்கி, சமூக மாற்றத்திற்கான போராட்டங்களிலிருந்தும் அரசியல் பங்கேற்பிலிருந்தும் இளைஞர்களை விலக்க ஆளும் வர்க்கமும் ஆளும் அரசியலும் திட்டமிட்டு செயல்படுகின்றன.
சமூக ஊடகங்களை வைத்து ஒரு தலைமுறையை மதிப்பிடும்போது, டிஜிட்டல் ஏற்றத்தாழ்வுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். பெரும்பாலான உழைக்கும் மக்கள் இளைஞர்கள் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களிலேயே ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த உண்மையை மறைத்துவிட்டு, சமூக ஊடக மயக்கம், ரோடு ஷோக்கள், கச்சேரிகள், ரீல்ஸ் கலாச்சாரம் ஆகியவற்றையே Gen Z-யின் அடையாளமாகக் காட்ட கார்ப்பரேட் ஊடகங்களும் வலதுசாரி அரசியலும் முயல்கின்றன. உரிமைகள் குறித்த விழிப்புணர்வு உருவாகாமல், இளைஞர்களை அரசியலிலிருந்து விலக்கி வைப்பதே அந்தப் பிரச்சாரத்தின் அடிப்படை நோக்கமாகும்.
உண்மையிலேயே அக்கறை இருந்தால்...
90s - 2000-க்குப் பிறகு வளர்ந்த தலைமுறையின் ஒரு பகுதி அரசியல்மயமாகாமல் இருந்தது என்பது ஓரளவு உண்மைதான். ஆனால், அதையே முழு தலைமுறையின் அடையாளமாகப் பொதுமைப்படுத்துவது தவறான சித்தரிப்பாகும். உண்மையிலேயே அக்கறை இருந்தால், கேட்க வேண்டிய கேள்வி வேறு. அரசியல்நீக்கம் செய்யப்பட்ட தலைமுறையை உருவாக்கியது எது?? மாணவர் அரசியலை வளாகங்களிலிருந்து அப்புறப்படுத்தியது எந்த அரசியல்? 90-களுக்குப் பிறகு ஏன் இப்படி மாறியது? இந்தக் கேள்விகளை ஆராய்வதற்குப் பதிலாக, இளைஞர்களையே குற்றவாளிகளாகச் சித்தரித்து, அதையே அரசியல் மூலதனமாக்க முயல்வது கார்ப்பரேட் ஊடகங்களும் முதலாளித்துவக் கட்சிகளும்.
உண்மையை மறைக்கலாம்; ஆனால் மௌனமாக்க முடியாது. வரலாற்றை மாற்றியது சொகுசான வாழ்க்கைக்குள் இருந்தவர்கள் அல்ல; அன்றாட சமூக நெருக்கடிகளை எதிர்கொண்டு மக்களோடு போராடிய உழைக்கும் வர்க்க இளைஞர்கள்தான்.