சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் அதன் சாதனைகளும் குறித்து எந்தச் சந்தேகமும் இல்லை. இன்றும் அது தன்னை ஒரு சோசலிச நாடாகவே முன்னிறுத்திக் கொண்டு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, ஆனால் அதற்கு சீன சந்தைப் பொருளாதாரமும் உலகமயமாக்கலும் தொழிலாளர் வர்க்கத்திற்கு பெரும் விலையை கொடுத்துள்ளனர். வேகமான தனியார்மயம், உலகமயம்ஒரு கம்யூனிஸ்ட் ஆட்சியில்கூட— எப்போதும் முன்மாதிரி அல்ல. சீனாவின் வளர்ச்சி ஒரு வெற்றிக் கதையோடு , ஒரு எச்சரிக்கை கதையும் சொல்கிறது.
வேலை இழப்பும் அழுத்தமும்
சீனாவின் சந்தை சீர்திருத்தங்கள் உலக வரலாற்றிலேயே மிக வேகமான தொழில்துறை வளர்ச்சியை உருவாக்கின. ஆனால் அந்த வளர்ச்சிக்கு மற்றொரு முகமும் இருந்தது. 1990களில் “Xiagang” (vசியாகாங்) என்று அழைக்கப்பட்ட காலகட்டத்தில், அரசு நிறுவனங்கள் (SOEs) சந்தை போட்டிக்காக மறுசீரமைக்கப்பட்டபோது கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். 1995 முதல் 2002 வரை மட்டும் அரசு நிறுவனங்களில் வேலை செய்தவர்களின் எண்ணிக்கை சுமார் 11.2 கோடியில் இருந்து 6.4 கோடியாக குறைந்தது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. GDP வளர்ச்சி வேகமாக இருந்தாலும், தொழிலாளர்களுக்கு அது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்யவில்லை.
இந்த காலகட்டம் சீனாவில் “இரும்பு அரிசி கிண்ணம்” (Iron Rice Bowl) என அழைக்கப்பட்ட வேலை பாதுகாப்பு முறையின் சிதைவாக பார்க்கப்பட்டது. ஓய்வூதியம், மருத்துவ பாதுகாப்பு, நிரந்தர வேலை ஆகியவை பலருக்கு இழக்கப்பட்டன. Liaoning, Daqing போன்ற தொழில்துறை மையங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஊதியத் தாமதம், வேலை இழப்பு, சமத்துவமின்மை ஆகியவை சமூக அழுத்தத்தை அதிகரித்தன. இதே நேரத்தில் உயர்கல்வி விரிவாக்கம் வேகமாக நடந்தது. ஆனால் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அதற்கேற்ற தரமான வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. இதனால் இளைஞர்களிடையிலும் மனஅழுத்தமும் எதிர்ப்பும் அதிகரித்தது.
உயர்ந்த சமத்துவமின்மை
சந்தை சீர்திருத்தங்களின் விளைவாக சீனாவில் வருமான சமத்துவமின்மை பெரிதும் உயர்ந்தது. Gini coefficient 0.30 அளவிலிருந்து 0.45க்கு மேல் உயர்ந்தது. இதனால் சமூக அதிருப்தி மற்றும் தொழிலாளர் போராட்டங்கள் அதிகரித்தன. வளர்ச்சி நடந்தாலும் அதன் பலன் சமமாக பகிரப்படவில்லை. நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான வித்தியாசம் அதிகரித்தது. கடலோர மாகாணங்கள் வேகமாக வளர்ந்தபோது, உள்நாட்டு பகுதிகள் பின்னடைவை சந்தித்தன.
இதனை உணர்ந்த ஹு ஜிண்டாவோ தலைமையிலான அரசு “Harmonious Society” என்ற புதிய அணுகுமுறையை முன்னிறுத்தியது. முழுமையான தனியார்மயமாக்கல் மற்றும் கட்டுப்பாடற்ற சந்தை வளர்ச்சி சமூக நிலைத்தன்மைக்கு ஆபத்தாக மாறும் என்பதை சீன அரசு புரிந்துகொண்டது. அதன்பின் சமூக பாதுகாப்பு, மருத்துவம், உள்கட்டமைப்பு மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் அரசு முதலீடுகள் அதிகரிக்கப்பட்டன.
அரசு நிறுவனங்களின் வளர்ச்சியும் தொழில்நுட்ப மீள்கட்டமைப்பும்
அதன் பின்னர் அரசு நிறுவனங்களை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சிகள் தொடங்கின. SASAC போன்ற அமைப்புகள் மூலம் முக்கிய SOEs ஒன்றிணைக்கப்பட்டு வலுப்படுத்தப்பட்டன. ரயில்வே, மின்சாரம், தொலைத்தொடர்பு, வங்கி, எரிசக்தி போன்ற துறைகளில் அரசு தனது கட்டுப்பாட்டை தக்க வைத்துக் கொண்டது.
Arthur Kroeber போன்ற பொருளாதார ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல, சீனா முழுமையான தனியார்மயமாக்கலை ஒருபோதும் ஏற்கவில்லை; மாறாக “மாநில கட்டுப்பாட்டுடன் கூடிய சந்தை பொருளாதாரம்” என்ற மாதிரியை உருவாக்கியது.
2008 உலக பொருளாதார நெருக்கடியின் போது இதன் முக்கியத்துவம் மேலும் வெளிப்பட்டது. உலக சந்தைகள் சரிந்தபோது, சீனா ¥4 டிரில்லியன் அரசு முதலீட்டு திட்டத்தை அறிவித்து உள்நாட்டு கட்டுமானம், ரயில்வே, தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பை விரிவுபடுத்தியது. பின்னர் “Made in China 2025” போன்ற திட்டங்கள் மூலம் semiconductor, EV, AI, renewable energy போன்ற துறைகளில் அரசு வழிநடத்தும் முதலீடுகள் அதிகரித்தன. இதன் மூலம் தொழில்நுட்ப தன்னிறைவு மற்றும் உள்நாட்டு உற்பத்தி திறனை சீனா வலுப்படுத்த முயன்றது.
அரசு கட்டுப்பாடு மற்றும் இந்தியாவுக்கான பாடங்கள்
சி ஜின்பிங் காலத்தில் “Common Prosperity” என்ற கோஷம் முக்கியமானது. Alibaba, Tencent, Didi போன்ற பெரிய டிஜிட்டல் நிறுவனங்கள் மீது anti-monopoly நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. Ant Group IPO நிறுத்தப்பட்டது. தனியார் மூலதனம் அரசின் கட்டுப்பாட்டை மீறக்கூடாது என்ற செய்தி தெளிவாக கொடுக்கப்பட்டது.
சீனாவின் அனுபவம் இந்தியாவுக்கு ஒரு முக்கிய பாடத்தை கற்பிக்கிறது. வேகமான தனியார்மயமாக்கல் மற்றும் அரசு நிறுவனங்களின் பலவீனம் ஆரம்பத்தில் வளர்ச்சியை தரலாம். ஆனால் நீண்ட காலத்தில் அது வேலை பாதுகாப்பின்மை, சமத்துவமின்மை, சமூக அதிருப்தி மற்றும் வெளிநாட்டு சந்தைகளின் மீது ஆபத்தான சார்பை உருவாக்கும். விரைவான தனியார்மயமாக்கலை ஊக்குவிப்பவர்களும் ஆதரிப்பவர்களும், சீன அரசாங்கமும் கம்யூனிஸ்ட் கட்சியும் தங்கள் மக்கள் வாழ்வினை மேம்படுத்திக்கொள்ள எதிர்கொண்ட நெருக்கடிகளை பற்றியும் உண்மையான போராட்டங்களைப் பற்றியும் அறியாதவர்களே ஆவர்.
தொழில்துறை வளர்ச்சி என்பது வெறும் ஏற்றுமதி அல்லது GDP எண்ணிக்கையால் மட்டும் அளவிடப்பட முடியாது. வேலைவாய்ப்பு, உள்நாட்டு நுகர்வு, தொழிலாளர் பாதுகாப்பு, மற்றும் அரசு வழிநடத்தும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை இணைந்தால்தான் நிலையான தேசிய வளர்ச்சி உருவாகும். அரசு வழிநடத்தும் தொழில்துறை முதலீடு, பொதுத்துறையை வலுப்படுத்துதல், திறன் மேம்பாடு,உள்நாட்டு சந்தை வளர்ச்சி ஆகியவை அவசியம்.
சீனா, வியட்நாம் போன்ற நாடுகள் அரசின் திட்டமிட்ட முதலீட்டால் வளர்ந்தன. இந்தியாவும் வேலைவாய்ப்பு மற்றும் உள்நாட்டு நுகர்வை வலுப்படுத்தினால்தான் நிலையான வளர்ச்சி சாத்தியம்.