Bread and RedBREAD
& RED
ArticlesVideosPodcastsEditorialEventsInteractShop
HomeArticlesVideosPodcastsEditorialEventsInteractShop
BREAD& RED
AboutSupportContactContributorsSubscribe

Copyright © 2026 Bread and Red

fXintik▶
PoliticssciencewareconomyFeminism

பாரிஸ் கம்யூன்: முதல் தொழிலாளர் புரட்சி

By நன்மாறன்·May 29, 2026
4 min read
பாரிஸ் கம்யூன்: முதல் தொழிலாளர் புரட்சி

பாரிஸ் கம்யூன்: முதல் தொழிலாளர் புரட்சியின் பாடங்கள்

“கம்யூன் மிகவும் முக்கியமானது. ஏனெனில் தொழிலாளர் வர்க்கம் முதலாளித்துவ அரசின் பழைய அதிகார அமைப்பை கைப்பற்றி, அதை தங்களுக்காக பயன்படுத்த முடியாது என்பதை அது காட்டியது.”

— ஃப்ரெட்ரிக் எங்கல்ஸ், கம்யூனிஸ்ட் அறிக்கை முன்னுரை (1872)

1871ஆம் ஆண்டில் நடந்த பாரிஸ் கம்யூன், உலக வரலாற்றில் முக்கியமான புரட்சிகளில் ஒன்றாகும். முதல்முறையாக தொழிலாளர் மக்கள் ஆட்சியை கைப்பற்றி, தங்களுக்கான அரசை அமைக்க முயன்றனர். அது நீண்ட காலம் நிலைக்கவில்லை என்றாலும், உலகம் முழுவதும் உள்ள சமூகநீதிப் போராட்டங்களுக்கு ஒரு பெரிய பாடமாக மாறியது.

நாம் வரலாற்றை நினைவுகூருவது வெறும் புகழ்வதற்காக அல்ல; அதிலிருந்து கற்றுக்கொள்வதற்காக. இன்றும் பல நாடுகளில் மதவாதம், தேசியவாதம் மற்றும் பெரிய முதலாளிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. பிரேசில், ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளில் அரசியல் அதிகாரமும் பணக்கார வர்க்கத்தின் சக்தியும் ஒன்றாக செயல்படுவது தெரிகிறது.

பாரிஸ் கம்யூன் நமக்கு ஒரு முக்கியமான விஷயத்தை கற்றுக்கொடுக்கிறது: மதத்தையும் அரசையும் பிரிக்க வேண்டும்; தொழிலாளர் மக்களை அரசியல் ரீதியாக ஒன்றிணைக்க வேண்டும்; உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வலுவான அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

போனபார்ட் ஆட்சியின் வீழ்ச்சி

1870–71 காலத்தில் நடந்த பிராங்கோ-பிரஷ்யப் போரின் போது பிரான்ஸ் மிகப்பெரிய பிரச்சினைகளை சந்தித்தது. நெப்போலியன் III தலைமையிலான அரசு போரில் தோல்வியடைந்தது. பொருளாதாரம் சீர்குலைந்தது; மக்கள் பட்டினி மற்றும் வேலை இழப்பால் அவதிப்பட்டனர்.

1870 செப்டம்பர் 2ஆம் தேதி, செடான் போரில் நெப்போலியன் III பிரஷ்யப் படையால் தோற்கடிக்கப்பட்டார். இதனால் அவரது ஆட்சியின் சக்தி சிதைந்தது.

பாரிஸில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். பின்னர் மூன்றாம் குடியரசு அறிவிக்கப்பட்டது. ஆனால் புதிய அரசு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை.

பிரஷ்யப் படைகள் பாரிஸை நோக்கி வந்தபோது, பழைய பிரெஞ்சு இராணுவம் பலவீனமடைந்தது. நகரத்தை பாதுகாக்க தேசிய பாதுகாப்புப் படை (National Guard) அமைக்கப்பட்டது. இதில் பெரும்பாலும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களே இருந்தனர். இந்த படை மெதுவாக மக்களின் சக்தியாக மாறியது.

கம்யூனின் உருவாக்கம்

1871 மார்ச் 18ஆம் தேதி, அரசாங்கம் தேசிய பாதுகாப்புப் படையின் பீரங்கிகளை பறிக்க முயன்றது. இதற்கு எதிராக பாரிஸ் மக்கள் கிளர்ச்சி செய்தனர். தொழிலாளர்கள் மற்றும் புரட்சியாளர்கள் நகரத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்றி பாரிஸ் கம்யூனை உருவாக்கினர்.

முதன்முறையாக தொழிலாளர் மக்கள் நேரடியாக அரசியல் அதிகாரத்தை பெற்றனர். கம்யூன் பல மாற்றங்களை கொண்டு வர முயன்றது. நிரந்தர இராணுவத்தை கலைத்து மக்கள் படையை உருவாக்கியது; மதத்தையும் அரசையும் பிரித்தது; தொழிலாளர்களின் உரிமைகளை ஆதரித்தது; சமத்துவமான சமூகத்தை உருவாக்க முயன்றது.

  • அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் இருந்த மன்னர்கள், மதச் சின்னங்கள் அகற்றப்பட்டன.
  • தேவாலயமும் அரசும் பிரிக்கப்பட்டன; கல்வி மதச்சார்பற்றதாக மாற்றப்பட்டது.
  • தொழிலாளர்களுக்காக அடகு கடைகள் மூடப்பட்டன; இரவு வேலை மற்றும்  அபராதங்கள் தடைசெய்யப்பட்டன.
  • பெண்களுக்கு சம ஊதியம் மற்றும் சம கல்வி கோரி பெண்கள் அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
  • பாரிஸ் கம்யூன் தேசியவாதம், இனவாதம் ஆகியவற்றை எதிர்த்து, உலக தொழிலாளர் ஒற்றுமையை வலியுறுத்தியது.
  • கம்யூன் ஏன் தோல்வியடைந்தது?

    பாரிஸ் கம்யூன் வெறும் 72 நாட்களே நீடித்தது. பின்னர் அது பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தால் நசுக்கப்பட்டது. முக்கியமான பிரச்சினை, வலுவான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட தலைமையின் பற்றாக்குறை. கம்யூன் வேகமாக அதிகாரத்தை கைப்பற்றியபோதிலும், அதை உறுதியாக காப்பாற்ற முடியவில்லை.

    பிரான்ஸ் வங்கி கம்யூனின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. அதில் மிகப்பெரிய செல்வம் இருந்தது. ஆனால் அந்த பணத்தை பயன்படுத்தி ஆளும் வர்க்கத்திற்கு எதிராக செயல்பட கம்யூன் தயங்கியது. இது ஒரு பெரிய தவறாக மாறியது. மேலும், புரட்சியை பாதுகாக்க ஒரு வலுவான புரட்சிப் படையை உருவாக்கவில்லை. மார்ச் 18க்குப் பிறகு தேசிய பாதுகாப்புப் படை வெர்செய்ல்ஸை தாக்கியிருந்தால், எதிரிகளை தோற்கடிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் தாமதம் காரணமாக எதிர்ப்புரட்சிச் சக்திகள் மீண்டும் ஒழுங்குபடுத்திக் கொண்டன.

    1871 மே மாதத்தில், பிரெஞ்சு அரசு படைகள் பாரிஸில் நுழைந்து ஆயிரக்கணக்கான கம்யூன் ஆதரவாளர்களை கொன்றன. இந்த நிகழ்வு “இரத்த வாரம்” என்று அழைக்கப்படுகிறது.

    வரலாற்றுப் பாடம்

    பாரிஸ் கம்யூன் தோல்வியடைந்தாலும், அது உலக வரலாற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தொழிலாளர் மக்கள் தங்களுடைய அரசை உருவாக்க வேண்டுமானால், பழைய முதலாளித்துவ அரசை வெறுமனே கைப்பற்றுவது போதாது; புதிய அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதை மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ் வலியுறுத்தினர். கம்யூன் நமக்கு இன்னொரு முக்கியமான பாடத்தையும் கற்றுக்கொடுக்கிறது: புரட்சிக்கு மக்கள் சக்தி மட்டும் போதாது; ஒழுங்கான அமைப்பும், தெளிவான தலைமையும், பாதுகாப்பு சக்தியும் அவசியம். இதன் விளைவாக, ஒரு தொழிலாளர் அரசு நிலைபெற்று செயல்படுவதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும் மக்கள் ஜனநாயகமும் அவசியம் என்பதை மார்க்சியவாதிகள் உணர்ந்தனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மார்க்ஸ் தனது பகுப்பாய்வைப் புதுப்பித்தார்.

    இன்று பாரிஸ் கம்யூனை நினைவூட்டிய பல இடங்கள் அழிக்கப்பட்டு விட்டன. இப்போது பாரிஸ் நகரில் உள்ள கம்பட்டா சுடுகாட்டில் இருக்கும் ஒரு பழைய சுவர் மட்டும் முக்கிய நினைவிடமாக உள்ளது. அந்த சுவரின் அருகில்தான் நூற்றுக்கணக்கான புரட்சியாளர்கள் கடைசியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்கு “பாரிஸ் கம்யூனில் உயிர்நீத்தவர்களின் நினைவாக” என்று எழுதப்பட்டுள்ளது. இன்றும் மக்கள் அந்த இடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.

    பாரிஸ் கம்யூனின் வெற்றிகளும் தவறுகளும் குறித்து கார்ல் மார்க்ஸ் ஆழமாக ஆய்வு செய்து, “பிரான்சின் உள்நாட்டுப் போர்/ Civil War In France” என்ற நூலை எழுதினார். அந்த நூலில் இருந்து கிடைத்த பாடங்கள் பின்னர் லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சிக்கு உதவியாக இருந்தன. சீனப் புரட்சிக்கும் பாரிஸ் கம்யூன் ஒரு ஊக்கமாக இருந்தது.

    இன்றைய காலத்திற்கும்.....

    மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ ஆகியோர் பாரிஸ் கம்யூன் பற்றி எழுதிய நூல்கள் மற்றும் கட்டுரைகள் இன்றும் படிக்கப்படுகின்றன. கம்யூனிஸ்டுகள் மட்டுமல்லாமல், அனார்க்கிஸ்ட்கள் மற்றும் சோஷலிஸ்டுகளும் பாரிஸ் கம்யூனை தொடர்ந்து நினைவுகூர்ந்து வருகின்றனர். அதன் வரலாறு பற்றிய ஆய்வுகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. அதைப் பற்றிய பழைய நூல்கள் மற்றும் ஆவணங்களும் தொடர்ந்து மீண்டும் வாசிக்கப்பட்டு ஆராயப்படுகின்றன.

    பாரிஸ் கம்யூன் இன்று வரை ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிராக போராடும் தொழிலாளர் மக்களின் போராட்டத்தின் அடையாளமாக உள்ளது.

    Related Articles

    கரப்பான் ஜனதா கட்சி (CJP): வெறும் இணைய கூச்சலா?
    Politics

    கரப்பான் ஜனதா கட்சி (CJP): வெறும் இணைய கூச்சலா?

    கல்பனா · May 31, 2026
    செயற்கை நுண்ணறிவு: வர்க்கப் போராட்டத்தின் புதிய களம்
    Politics

    செயற்கை நுண்ணறிவு: வர்க்கப் போராட்டத்தின் புதிய களம்

    சஞ்சய் ராமசாமி · May 31, 2026
    ஏகாதிபத்தியத்தின் கல்லறை: வியட்நாம்
    science

    ஏகாதிபத்தியத்தின் கல்லறை: வியட்நாம்

    சமீர் ஆசாத் · May 30, 2026
    GENZ அரசியல் : மாறிவரும் அரசியல் களம்
    Politics

    GENZ அரசியல் : மாறிவரும் அரசியல் களம்

    ஹிஷாம் காலித் · May 29, 2026
    ஈரான் போர்: அமெரிக்க  ஆதிக்கத்தின் வீழ்ச்சியா?
    Politics

    ஈரான் போர்: அமெரிக்க ஆதிக்கத்தின் வீழ்ச்சியா?

    தோழர். அமீர் ஹைதர் கான் · May 29, 2026
    தீவிரவாதமும் ஏகாதிபத்தியமும்
    Politics

    தீவிரவாதமும் ஏகாதிபத்தியமும்

    சஞ்சய் ராமசாமி · May 28, 2026
    கரப்பான் ஜனதா கட்சி (CJP): வெறும் இணைய கூச்சலா?
    Politics

    கரப்பான் ஜனதா கட்சி (CJP): வெறும் இணைய கூச்சலா?

    கல்பனா · May 31, 2026
    செயற்கை நுண்ணறிவு: வர்க்கப் போராட்டத்தின் புதிய களம்
    Politics

    செயற்கை நுண்ணறிவு: வர்க்கப் போராட்டத்தின் புதிய களம்

    சஞ்சய் ராமசாமி · May 31, 2026
    ஏகாதிபத்தியத்தின் கல்லறை: வியட்நாம்
    science

    ஏகாதிபத்தியத்தின் கல்லறை: வியட்நாம்

    சமீர் ஆசாத் · May 30, 2026
    GENZ அரசியல் : மாறிவரும் அரசியல் களம்
    Politics

    GENZ அரசியல் : மாறிவரும் அரசியல் களம்

    ஹிஷாம் காலித் · May 29, 2026
    ஈரான் போர்: அமெரிக்க  ஆதிக்கத்தின் வீழ்ச்சியா?
    Politics

    ஈரான் போர்: அமெரிக்க ஆதிக்கத்தின் வீழ்ச்சியா?

    தோழர். அமீர் ஹைதர் கான் · May 29, 2026
    தீவிரவாதமும் ஏகாதிபத்தியமும்
    Politics

    தீவிரவாதமும் ஏகாதிபத்தியமும்

    சஞ்சய் ராமசாமி · May 28, 2026