
"இன்று வெட்டுக்கிளிகள் யானையுடன் போராடுகின்றன. ஆனால் நாளை யானையின் குடல் பிடுங்கி எறியப்படும்” என்று கூறினார் ஹோ சி மின்...
அது வெறும் உற்சாக வார்த்தைகளாக இல்லை, வரலாற்றையே மாற்றியமைத்த முழக்கம்
ஹோ சி மின் வியட்நாமின் புரட்சித் தலைவர். இளமையிலேயே காலனித்துவ அடக்குமுறையை எதிர்த்து அரசியலில் ஈடுபட்டார். உலகின் பல நாடுகளில் வேலை செய்து அனுபவம் பெற்ற அவர், பின்னர் வியட்நாம் விடுதலைப் போராட்டத்தை வழிநடத்தினார். காலனித்துவ ஆட்சி, வறுமை, விவசாயப் பின்னடைவு, பல தசாப்த காலப் போர்கள்—இவற்றால் சிதைந்த ஒரு நாடு, உலகின் மிகப்பெரிய இராணுவ வல்லரசான அமெரிக்கப் பேரரசையே தோற்கடித்தது என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் வியட்நாம். ஆயுத பலத்தால் அல்ல, மக்களின் ஒற்றுமையால். செல்வத்தால் அல்ல, விடுதலைக்கான உறுதியால். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு தேசமே எழுந்து நின்றபோது, பேரரசுகளும் மண்டியிடய நிலை வந்தது.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து வியட்நாம், பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியின் கீழ் கொடூரமான சுரண்டலுக்கு உள்ளானது. நிலங்கள் பறிக்கப்பட்டன. விவசாயிகளின் உழைப்பு கொள்ளையடிக்கப்பட்டது. நாட்டின் வளங்கள் வெளிநாட்டு முதலாளிகளின் லாபமாக மாற்றப்பட்டன. மக்களின் வறுமையும் துன்பமும் பேரரசுகளின் செல்வமாக குவிந்தது. ஆனால் ஒவ்வொரு அடக்குமுறையும் எதிர்ப்பின் விதையையே விதைத்தது. அந்த விதை பின்னர் புரட்சியாக வெடித்தது.
வியட்நாமின் விடுதலைப் போராட்டம் வெறும் தேசிய விடுதலைக்கான போராட்டம் மட்டுமல்ல; அது சமூக நீதிக்கான, சுயநிர்ணயத்திற்கான, ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கான போராட்டமாகவும் இருந்தது. ஹோ சி மின் தலைமையில் விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்தனர். 1954ஆம் ஆண்டு டியென் பியென் பு போரில் பிரெஞ்சு காலனித்துவ படைகள் தோற்கடிக்கப்பட்டன. உலகின் மிகப்பெரிய காலனித்துவ சக்திகளில் ஒன்றை மக்கள் சக்தி மண்டியிட வைத்த தருணமாக அது வரலாற்றில் பதிவானது.
பிரெஞ்சு ஆட்சி வீழ்ந்தபின் அமெரிக்கா நேரடியாக வியட்நாமில் தலையிட்டது. நாபாம் குண்டுகள், ஏஜென்ட் ஆரஞ்சு இரசாயனத் தாக்குதல்கள், இடைவிடாத விமான குண்டுவீச்சுகள் என மனித வரலாற்றில் இல்லாத அளவிற்கு வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. ஆயினும் வியட்நாம் மக்கள் சரணடையவில்லை. விவசாயிகள் போராளிகளாகவும், பெண்கள் எதிர்ப்பின் முன்னணியாகவும், கிராமங்கள் புரட்சியின் கோட்டைகளாகவும் மாறின. இது ஒரு இராணுவத்தின் போர் அல்ல; ஒரு மக்களின் முழுமையான எதிர்ப்புப் போர்.
பிரெஞ்சு மற்றும் அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய வியட்நாமியர்களின் போராட்டத்தை பலர் “யானையை எதிர்க்கும் வெட்டுக்கிளிகளின் போர்” என்று கேலி செய்தனர்.அதற்கு ஹோ சி மின், “நம்மிடம் விமானங்களோ, பீரங்கிகளோ இல்லை. ஆனால் மார்க்சியமும் லெனினியமும் வழிகாட்டும் உறுதியான இலட்சியம் இருக்கிறது” என்று பதிலளித்தார்.
மேலும், “இன்று வெட்டுக்கிளிகள் யானையுடன் போராடுகின்றன. ஆனால் நாளை யானையின் குடல் பிடுங்கி எறியப்படும்” என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார். அது வெறும் உற்சாக வார்த்தைகளாக இல்லை, வரலாற்றையே மாற்றியமைத்தது. உலகின் மிகப்பெரிய இராணுவ வல்லரசான அமெரிக்காவை வியட்நாம் மக்கள் தோற்கடித்தனர்.
வியட்நாம் விடுதலைப் போராட்டத்தின் தலைவரான ஹோ சி மினை, அந்நாட்டு மக்கள் அன்போடு “ஹோ மாமா/UNCLE HO” என்று அழைத்தனர். அந்த ஒரு பெயரே, மக்கள் அவர்மீது வைத்திருந்த அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துகிறது.
1975 ஏப்ரல் 30 அன்று சாய்கான் விடுவிக்கப்பட்டது. அமெரிக்க ஆதரவு ஆட்சி சரிந்தது. உலகின் மிகப்பெரிய இராணுவ வல்லரசை ஒரு சிறிய நாடு தோற்கடித்தது. அது வியட்நாம் வெறும் ஒரு நாட்டின் வெற்றிக் கதை அல்ல; அது அடக்குமுறைக்கு எதிராக போராடும் அனைத்து மக்களுக்கும் நம்பிக்கையின் சின்னமாகும்.மக்கள் ஒன்றுபட்டால் எந்தப் பேரரசும் வெல்ல முடியாது. ஆயுதங்கள் வரலாற்றை எழுதாது; போராடும் மக்களே வரலாற்றை எழுதுவார்கள்.
ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும், வியட்நாம் ஒரு சோசலிச நாடாக தனது பாதையில் உறுதியாக முன்னேறி வருகிறது. போரால் சிதைந்த நாட்டிலிருந்து இன்று உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக அது உருவெடுத்துள்ளது. வறுமையை கணிசமாகக் குறைத்து, கல்வி, சுகாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது.
மார்க்சியக் கொள்கைகளையும் மக்கள் நலன் மையமான வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு சவால்களைத் தாண்டி வியட்நாம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. வியட்நாம் இன்று ஒரு நாடு மட்டுமல்ல; சோசலிச வளர்ச்சிப் பாதையும் மக்கள் மையக் கொள்கைகளும் வெற்றிகரமாக அமைய முடியும் என்பதை நிரூபிக்கும் உயிருள்ள சான்றாக உள்ளது.