
வரலாறு எப்போதும் சின்னச் சின்ன கேள்விகளில் தொடங்குகிறது. ஒரு தலைமுறை மற்றொரு தலைமுறையிடம் கேட்கும் கேள்விகளே சமூகங்களை மாற்றுகின்றன.
“Bro”, “dude” போன்ற stereotype வார்த்தைகளில் பேச வேண்டும் என்பதில்லை. எனக்குத் தெரிந்த வகையில், ஒரு உண்மையான உரையாடலாக இதை பகிர விரும்புகிறேன். இன்று பலருக்கு சே குவேரா என்பது ஒரு டி-ஷர்ட்டில் அச்சிடப்பட்ட முகம்!ஒரு போஸ்டர் ! ஒரு ரீல்! ஒரு ஸ்டைல் சின்னம். ஆனால் சே குவேரா தனிமனித வெற்றியையோ, தனிமனித ஆதிக்கத்தையோ போற்றியவர் அல்ல. இளைஞர்கள் தனியாக சிந்தித்து, கூட்டமாக செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

எனக்கு "சே" முதன்முதலில் அறிமுகமானது Motorcycle Diaries திரைப்படம் மூலமாக. அந்தப் படத்தில் வரும் அற்புதமான காட்சிகள், இசை, புகைப்படங்கள்— ஒரு பயணமாகவே உணர வைத்தன. இந்தப் படத்தைப் பார்க்கும் எவரும் பயணம் செய்து தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பார்க்க விரும்புவார்கள்; நானும் அப்படித்தான் செய்தேன். அந்தப் பயணத்தின் முடிவில் எனக்குள் எழுந்த கேள்வி இதுதான்:
“இது என்னை இவ்வளவு பாதிக்கிறது என்றால், இப்படிப் வாழ்ந்த சே-க்கு அது எப்படி இருந்திருக்கும்?”
எர்னஸ்டோ குவேரா அர்ஜென்டினாவில் பிறந்தார் என்று பலர் கூறுவர். ஆனால் உண்மையில், ய அந்த மோட்டார் சைக்கிள் பயணத்தில்தான் “சே” பிறக்கிறான்.
லத்தீன் அமெரிக்காவின் வறுமை, சுரண்டல், சமத்துவமின்மை மற்றும் மனிதத் துயரங்களை ஆண்டஸ் மலையைத் தாண்டி நேரில் கண்ட இளைஞன், ஒரு மருத்துவராக மட்டும் அல்லாமல், சமூக மாற்றத்திற்காக போராடும் மனிதராக மாறினான்.ஆனால் அந்த மாற்றம் வெறும் உணர்ச்சிவசப்பட்ட கோபத்தால் உருவானதல்ல. அது ஆழமான அரசியல் விழிப்புணர்வு, அறிவுப்பூர்வமான தெளிவான புரிதலால் உருவானது. சேவை வெறும் கோபக்கார இளைஞனாகவோ, ஒரு STYLE ICON - கவோ சுருக்கிப் பார்ப்பது அவரது தத்துவத்தையும் அரசியலயையும் அழிப்பதாகவும்.
சே ஒருபோதும் ஒரு கலாச்சாரச் சின்னமாகவோ, வாழ்க்கைமுறை பிராண்டாகவோ இருக்க விரும்பவில்லை. அவர் தனிமனித வெற்றியை விட கூட்டுச் செயல்பாட்டை நம்பினார். மனிதர்கள் சுதந்திரமாக சிந்திக்கலாம்; ஆனால் சமூக மாற்றம் என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட மக்களின் சக்தியால் மட்டுமே சாத்தியம் என்று அவர் வலியுறுத்தினார்.
இன்றைய டிஜிட்டல் உலகமும் ஊடகங்களும் மனிதனைத் துண்டித்துத் தனிமைப்படுத்துவதுடன், தனிப்பட்ட வெற்றியை முன்னிலைப்படுத்துகின்றன. சினிமாவில் சூப்பர் ஸ்டார், Comapany-களில் ஸ்டார் பர்ஃபார்மர், இன்ஸ்டாகிராமில் இன்ஃப்ளூயன்சர், யூடியூபில் ஸ்டார் என ஒவ்வொருவரையும் ஒரு "பிராண்டாக" மாற்றுகின்றன. இங்கு உரையாடலுக்கும், கூட்டு சிந்தனைக்கும் இடமில்லை.

இதற்கு மாற்றாக, சே தனிநபர் வெற்றியை விட அமைப்பையும், போட்டியை விட கூட்டுச் செயல்பாட்டையும் முன்னிறுத்தினார். சிந்தனைகளைப் பகிர்ந்து அறிவை வளர்த்துக் கொள்வதும், கூட்டாகக் கற்றுக்கொள்வதும், சமூக முன்னேற்றத்தின் அடிப்படை என்று அவர் நம்பினார். இளைஞர்கள் மிகப் பெரிய சக்தி, அவர்களின் கோபமும் வேகமும் மிகுந்த ஆற்றல் கொண்டவை. ஆனால் அந்த ஆற்றல் சிதறிக் கிடந்தால், அது தவறான கைகளுக்குச் சென்று விடும். அதே ஆற்றல் அரசியல் புரிதலுடனும் சமூகப் பார்வையுடனும் ஒன்றிணைந்த இயக்கமாக - அமைப்பாக மாறினால், அவர்கள் மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும்; வரலாற்றையே படைக்க முடியும் என்று சே முன்வைத்தார்.
தொழில்நுட்பம் கோடிக்கணக்கான மக்களை இணைத்திருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் தனிமையும் அந்நியமாதலும் அதிகரித்துள்ளன. இதைத்தான் Karl Marx “அந்நியமாதல்” (Alienation) என்று அழைத்தார். சே தனிமையை ஆதரிக்கவோ அல்லது கொண்டாடவோ இல்லை. அதற்குப் பதிலாக, “ஏன்?” என்ற கேள்வியை எழுப்பினார்.

இன்று பலர் தங்கள் மனவேதனைகளை Emotional APPS, Counsellors, செயலிகளிடம் பகிர்கிறார்கள். ஆனால் நண்பர்கள், குடும்பத்தினர், அண்டை வீட்டார் ஆகியோருடன் பேச முடியாமல் தவிக்கிறார்கள். போட்டி, பாதுகாப்பற்ற வாழ்க்கை, வேலைப் பாதுகாப்பின்மை, உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகள் — இவை அனைத்தையும் தனிநபர் தோல்விகளாக அல்ல, சமூக அமைப்புகளின் விளைவுகளாகப் பார்க்க வேண்டும் என்று சே கூறினார்.
அதனால்தான் அவர் இளைஞர்களை கேள்வி எழுப்ப சொன்னார்: இந்தச் சமூகம் ஏன் இவ்வாறு இயங்குகிறது? அதிகாரம் யாரிடம் உள்ளது ? யார் பயனடைகிறார்கள்? மக்கள் எவ்வாறு ஒன்றிணைந்து மாற்றத்தை உருவாக்க முடியும்?
அவருடைய பதில் எளிமையானது: அணிதிரட்டப்பட்ட மக்கள் சக்தி.
இது தனிநபர்களின் பிரச்சினை மட்டும் அல்ல; ஒரு கட்டமைப்பு சார்ந்த பிரச்சினை. சமூகங்களை உருவாக்கும்போதும், மக்களை ஒருங்கிணைக்கும்போதும், அந்த அமைப்புரீதியான சிக்கலையும் எதிர்த்துப் போராட வேண்டும். ஏனெனில் முதலாளித்துவம் இதை மீண்டும் மீண்டும் உருவாக்கிக்கொண்டே இருக்கும். தொழில்நுட்பம் நம்மை இணைத்தது; ஆனால் நவீன முதலாளித்துவமும் , டிஜிட்டல் சூழலும் மனிதர்களுக்கிடையேயான உண்மையான உறவுகளையும் சமூக வாழ்வின் உணர்வையும் சிதைத்துவிட்டன
இன்று ஒரு முரண்பாடு நிகழ்ந்திருக்கிறது. மக்களை ஒன்றிணைய , சமூக மாற்றத்திற்காக வாழ்ந்த மனிதர் ஒரு சந்தைப் பொருளாக மாற்றப்பட்டிருக்கிறார், டி-ஷர்ட்டின் வடிவமாக , மோட்டார் சைக்கிளில் ஒரு ஸ்டிக்கராக சுருக்கப்பட்டிருக்கிறார்.
அமெரிக்கத் திரைப்படங்களில் காணப்படும் விவேகமற்ற துணிச்சல் கொண்ட சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களைப் போல சே சித்தரிக்கப்படுகிறார். ஆனால் அவர் அத்தகைய சாகசக்காரர் அல்ல.
அவர் யதார்த்தத்தை புரிந்துகொண்டவர், அதனால்தான், அறிவியல் அடிப்படையில் மார்க்சியத்தைத் தேர்ந்தெடுத்தார் . தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறினார்:
“பலர் என்னை ஒரு சாகசக்காரன் என்று அழைக்கலாம். ஆனால் நான் ஒரு வித்தியாசமான சாகசக்காரன்; என் நம்பிக்கைகள் உண்மை என்பதை நிரூபிக்க என் உயிரையே பணயம் வைப்பவன்.”
உலகம் சேவின் முகத்தை நினைவில் வைத்திருக்கிறது. ஆனால் அவர் எழுப்பிய கேள்விகளை மறந்துவிட்டது. அவரது முகத்தை அணிவதை விட, அவரது சிந்தனைகளைப் புரிந்துகொள்வதே முக்கியம். ஏனெனில் சே என்பது ஒரு மனிதரின் பெயர் மட்டுமல்ல. அநீதியைக் கண்டு கொதிக்கும் ஒவ்வொரு மனதிலும் சே மீண்டும் பிறக்கிறான். மனித மாண்பை மீட்டெடுக்கும் வரை , சமத்துவத்திற்காக மக்கள் போராட்ட வரை , வர்க்க பேதங்களும் ஏற்றத்தாழ்வும் இருக்கும் வரை — சே பிறந்துகொண்டே இருப்பான்.
சே குவேராவையும் ஃபிடல் காஸ்ட்ரோவையும் வெறும் போராளிகளாக மட்டும் பார்ப்பது, அவர்களின் முழு பங்களிப்பை புரிந்துகொள்ளாமல் இருப்பதாகும். புரட்சிக்குப் பிறகு கல்வி மற்றும் மருத்துவத்தை நாட்டின் வளர்ச்சியின் அடித்தளமாக அவர்கள் மாற்றினர்.
ஒரு நாட்டின் எதிர்காலம் கல்வி மற்றும் மருத்துவத்தில் தான் இருக்கிறது என்று அவர்கள் நம்பினர். அதனால் இந்தத் துறைகளில் அதிக முதலீடு செய்யப்பட்டது. விவசாயம் மற்றும் சிகார் தொழில்களில் இருந்து கிடைத்த வருவாய் மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட்டது. இதுவே கியூபாவின் இன்றைய சமூக முன்னேற்றத்திற்கும் மருத்துவச் சாதனைகளுக்கும் வலுவான அடித்தளமாக அமைந்தது.
சே குவேராவின் நினைவேந்தல் நிகழ்வில் ஃபிடல் காஸ்ட்ரோ கூறினார்:
"நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய், செ!"
அது உண்மைதான். இன்று சே , போராட்ட உணர்வின் ஒரு வடிவமாக மாறியிருக்கிறார். ஆனால் அவரது சிந்தனைகள் வெறும் உணர்வுகளைத் தாண்டியவை. அவை அறிவியல் அடிப்படையிலானவை, அரசியல் தெளிவு கொண்டவை, யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டவை, அவற்றை அறிந்துகொள்வது சமூக விழிப்புணர்வுக்கு அவசியமானது.

இந்த விஷயங்கள் பொதுவாக Gen Z-க்கு தெரிந்தவை. ஆனால் Gen Y, Gen X மற்றும் 90களின் தலைமுறையினருக்கு அவை முழுமையாக அறிமுகமில்லை. அதனால் இதை அவர்களுடன் பகிர்வதற்கான ஒரு வாய்ப்பாக நான் இதைப் பார்க்கிறேன். ஏனெனில் Gen Z-ஐ விட 80கள் மற்றும் 90கள் தலைமுறையினரை அரசியலாக்குவதுதான் இன்று அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது போல. பலர் Gen Z அரசியலாக்கப்படவில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் என் பார்வையில் அது அப்படியல்ல. அது முந்தைய தலைமுறைகளான Gen Y மற்றும் Gen X உருவாக்கிய சமூக, அரசியல் சூழலின் தொடர்ச்சியே Gen Z.
அடித்தளம் உறுதியாக அமைக்கப்படாமல் உயரமான கட்டிடத்தை எழுப்ப முடியாது. அதுபோல தலைமுறைகளுக்கிடையேயான இடைவெளியைக் கடந்து உரையாடல்கள் நடைபெறாமல் எந்த மாற்றத்தை உருவாக்க முடியாது
இது ஒரு உரையாடலின் தொடக்கம் என்று நான் நினைக்கிறேன்.





