
இப்போது அரசியல் என்பது வெறும் கட்சிகளின் கட்டுப்பாட்டில் இல்லை. சமூக ஊடகங்கள், YouTube அரசியல் விமர்சகர்கள், Instagram influencers, political strategists, corporate branding மற்றும் paid media campaigns ஆகியவை தேர்தலின் மைய சக்திகளாக மாறிவிட்டன.
ஒரு காலத்தில் மக்கள் அரசியல் கருத்துக்களை கட்சிக் கூட்டங்கள் அல்லது செய்தித்தாள்களின் மூலம் அறிந்தார்கள். ஆனால் இன்று Reels, Shorts, memes, troll pages, hashtags மற்றும் viral videos தான் அரசியல் மனநிலையை தீர்மானிக்கின்றன. இன்று அரசியல் நிலைமையே வேறுபட்டுள்ளது கருத்துக்களை அரசியல் விவாதங்கள் மூலம் அல்லாமல் கைப்பேசியில் சில நொடிகளில் பார்க்கப்படும் குறும்படங்கள், அரசியல் விமர்சனக் காணொளிகள், இணையப் பிரபலங்களின் கருத்துக்கள், பரவும் பதிவுகள் மற்றும் உணர்ச்சி தூண்டும் விளம்பரங்களே மக்களின் அரசியல் மனநிலையை உருவாக்குகின்றன.
அரசியல் இப்போது கொள்கை மையமாக இல்லாமல், “பிம்ப அரசியல்” மையமாக மாறி வருகிறது. யார் அதிகம் பேசப்படுகிறார்? யார் மக்கள் மனதில் வீரத் தோற்றத்தை உருவாக்குகிறார்? யார் இணையத்தில் அதிகம் பரவுகிறார்? என்பதுதான் முக்கியமாகிறது.
அது “SAVIOUR வருவார் மக்களை ரட்சிப்பார்”.
ஒரே மனிதர் வந்து சமூகத்தை காப்பாற்றுவார். ஒரே தலைவர் ஊழலை அழிப்பார். ஒரே வலிமையான மனிதர் நாட்டை உயர்த்துவார் என்ற கதை எல்லா தளங்களிலும் தொடர்ந்து விற்கப்படுகிறது.
இந்த உளவியல் மக்கள் கூட்டுச் செயல்பாட்டின் மீது வைத்திருந்த நம்பிக்கையை குறைக்கிறது. “நாம் ஒன்றாக மாற்றம் உருவாக்கலாம்” என்ற எண்ணத்திற்கு பதிலாக, “ஒரு தலைவரைத் தேர்வு செய்தால் போதும்” என்ற மனநிலை உருவாக்கப்படுகிறது. இது பழைய சரக்கு தான் ஆனால் புதிய வடிவில் இறக்கப்பட்டுள்ளது
இதுவே நவீன முதலாளித்துவ அரசியலின் முக்கிய உத்திகளில் ஒன்றாக மாறியுள்ளது.
இன்றைய அரசியல் மிகப்பெரிய வணிக விளம்பர முயற்சியைப் போல மாறியுள்ளது. மக்கள் மனநிலையை மாற்ற அரசியல் ஆலோசகர்கள், விளம்பர நிறுவனங்கள், தரவுப் பகுப்பாய்வு குழுக்கள் மற்றும் தனியார் ஊடக அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் பிரச்சாரங்கள் கூட சந்தை விளம்பரங்களைப் போல திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.
இதனால் அதிக பணமும் ஊடக ஆதிக்கமும் கொண்ட கட்சிகள் பெரும் முன்னிலை பெறுகின்றன.
அதே நேரத்தில் அடித்தள மக்களுடன் நேரடியாக இணைந்திருந்த அரசியல் மெதுவாக பலவீனமடைகிறது. தொழிற்சங்கங்கள், தெருக்கூட்டங்கள், சிறிய பொதுக்கூட்டங்கள், வீடு வீடாகச் சென்று மக்களை சந்திக்கும் முறைகள் அனைத்தும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
இந்த புதிய அரசியல் சூழலைப் புரிந்துகொள்ளத் தவறும் பல பாரம்பரிய மற்றும் இடதுசாரி கட்சிகள் இன்றைய இளைஞர்களை சென்றடைய சிரமப்படுகின்றன.
ஏனெனில் அவை இன்னும் பழைய அரசியல் மொழியிலும் நீண்ட கருத்தியல் உரைகளிலும் அதிகமாக நம்பிக்கை வைத்துள்ளன. ஆனால் இன்றைய இளைஞர்கள் மிக வேகமான காட்சிப் பண்பாட்டில் வளர்ந்த தலைமுறை. அவர்களுக்கு நீண்ட அரசியல் உரைகளை விட சில நொடிகளில் உணர்ச்சியைத் தூண்டும் செய்திகளே அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இதனால் கருத்தியல் அரசியலை விட உணர்ச்சி அரசியல் அதிக சக்தி பெறுகிறது.
Tamil Nadu அரசியலிலும் இன்றைய மாற்றங்கள் மிகவும் தெளிவாகக் காணப்படுகின்றன. குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களிடையே “மாற்றம் வேண்டும்” என்ற மனநிலை மிக வலுவாக உருவாகியுள்ளது.
இந்த தலைமுறையின் முக்கிய கவலைகள் பழைய தலைமுறைகளைப் போல கருத்தியல் அரசியல் அல்ல. வாழ்வாதார நெருக்கடி அவர்களை சித்தாந்தத்தைப் பற்றி சிந்திக்கவும் யதார்த்தத்தைப் பார்க்கவும் செய்யவில்லை மாறாக வேலைவாய்ப்பு, அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு, கல்வி, சமூக நலன் மற்றும் எதிர்கால பாதுகாப்பு போன்ற அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களே அவர்களின் அரசியல் முடிவுகளை தீர்மானிக்கின்றன.
20 வயதான கணினி பயன்பாட்டியல் பட்டதாரி வினோதினி கூறுவது போல, வேலைஇல்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது இன்று இளைஞர்களின் மிகப்பெரிய கவலையாக மாறியுள்ளது. வேலைவாய்ப்பு பற்றிய அச்சமும், எதிர்காலம் குறித்த நிலைமையற்ற உணர்வும் இன்றைய இளைஞர்களின் அரசியல் மனநிலையை ஆழமாக பாதிக்கின்றன.
இந்த புதிய அரசியல் சூழல் இடதுசாரி மற்றும் பாரம்பரிய மக்கள் இயக்கங்களுக்கு மிகப்பெரிய சவாலை உருவாக்கியுள்ளது.
ஏனெனில் பழைய அரசியல் முறைகள் மட்டும் இன்று போதுமானதாக இல்லை. தெருக்கூட்டங்கள் மற்றும் நீண்ட கருத்தியல் உரைகள் மட்டும் புதிய தலைமுறையை சென்றடைய முடியாது.இன்றைய இளைஞர்கள் சமூக ஊடக உலகில் வாழ்கின்றனர். அவர்கள் காட்சிகள், உணர்ச்சி, வேகம் மற்றும் குறும்பட அரசியலின் வழியாக அரசியலை அனுபவிக்கின்றனர். இதனால் இடதுசாரிகள் இந்த புதிய தளங்களுக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மக்கள் அரசியல் இயக்கம் (mass line) என்பது மக்களிடமிருந்து கற்றுக்கொண்டு, அவர்களையே ஒழுங்குபடுத்தி, அவர்களுடன் சேர்ந்து போராட்ட சக்தியை உருவாக்கும் அணுகுமுறை. இது இடதுசாரி அரசியலின் அடிப்படை கருவி.இன்றைய சூழலில் தொழிற்சங்கங்களை (trade unions) மற்றும் மக்கள் அடிப்படையிலான இயக்கங்களை வலுப்படுத்துவது மிக அவசியமானதாகிறது. இது வெறும் அரசியல் விருப்பம் அல்ல; இடதுசாரி/ மக்கள் அரசியல் இயக்கங்களுக்கு தேவையாக போல உள்ளது

சமூக ஊடகங்களை முழுமையாக நிராகரிப்பது தீர்வல்ல. மாறாக, அந்த தளங்களுக்குள் நுழைந்து மாற்று அரசியல் மொழியை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.
முதலாளித்துவம் பயன்படுத்தும் அதே காட்சி அரசியல், அதே தொழில்நுட்ப கருவிகள் மற்றும் அதே ஊடக இடங்களை பயன்படுத்தியே மக்கள் மைய அரசியலை மீண்டும் கட்டமைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில், “நாயகன் அரசியல்/HERO WORSHIP” என்ற மாயையை உடைத்து, கூட்டுச் சிந்தனை, தொழிலாளர் ஒற்றுமை, மக்கள் இயக்கம் மற்றும் சமூக நீதி அரசியலை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும்.
இதுவே எதிர்கால அரசியல் போராட்டத்தின் முக்கியமான களமாக மாறுகிறது. இன்றைய உலக அரசியல் வெறும் தேர்தல் போட்டி அல்ல. அது மனிதர்களின் சிந்தனையை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்ற பெரிய உளவியல் மற்றும் பண்பாட்டு போராட்டமாக மாறியுள்ளது.
வரலாறு நேர்கோட்டில் தனியாகப் பயணிப்பதில்லை , இன்று வலதுசாரி தலைவர்களுக்கு வாக்களித்த அதே இளைஞர்களே, மற்றொரு தருணத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களிலும், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களிலும், Cuba உடன் ஒற்றுமை தெரிவிக்கும் போராட்டங்களிலும் முன்னணியில் நிற்கின்றனர். இதன் மூலம் ஒரு முக்கியமான உண்மை வெளிப்படுகிறது: இளைஞர்கள் நிரந்தரமாக ஒரே அரசியல் சிந்தனையில் நிலைத்து நிற்பவர்கள் அல்ல. அவர்களிடம் அரசியல் விழிப்புணர்வு வளர்க்கப்பட்டால், கூட்டுச் செயல்பாட்டின் அவசியம் புரியவைக்கப்பட்டால், அமைப்புசார்ந்த அரசியல் பணிகள் முன்னெடுக்கப்பட்டால், இந்த தலைமுறை மீண்டும் மக்கள் மைய அரசியலுக்குள் நகர முடியும். அதனால் இன்றைய முக்கியமான அரசியல் சவால் GEN Z 2.0, சமூக ஊடகங்களை நிராகரிப்பது அல்ல; மாறாக அந்த இடத்திற்குள் நுழைந்து, தனிநபர் மைய அரசியலை எதிர்த்து, கூட்டுச் சிந்தனையையும் ஜனநாயக மக்கள் அரசியலையும் மீண்டும் கட்டியெழுப்புவதாகும்